அந்தரத்தில் தொங்கும் நிலா
அழகான வெள்ளை நிலா
பிள்ளை சோறு உண்ண நிலா
கொள்ளை இன்பம் தந்த நிலா..
ராத்திரியில் விழித்திருந்து
பகலிலே படுத்திருப்பாய்
நீளமான இரவுகளில்
என் வழியில் ஒளி தருவாய்
கவிஞன் சொல்லெடுக்க
மூலதனம் நீதானே
உவமை ஊற்றுக்களில்
நீரோட்டம் நிலா தானே..
உனக்குள்ளே ஒரு பாட்டி
இறக்காமல் இருக்கின்றாள்
அவள் சுட்ட வடை எல்லாம்
ஆம்ஸ்ட்ராங் களவாட வந்தானா?
இரவுகளை வெளுத்துக்கட்டும்
உயிரில்லா வண்ணானே
உன்னில் உயிர்வாழ முடியுமா
தேடலில் விஞ்ஞானம்
பசிகொண்ட பிள்ளைமனம்
தாங்காத பெத்தமனம்
தண்ணி வாளியில் நிலாவை
சிறைகொண்டு பிள்ளை வாயில்
நிலாச்சோறு ஊட்டுவர்..
காதலர்கள் வாழ்கையிலே
இனிமையான வரவு நிலா
ஆணும் பெண்ணும் காதலிக்கும்
ஒரே இனம் நீ அல்லவா?
பகலில் பூத்தால் வாடும் என்றா?
நிலவில் பூக்கிறது மல்லிகை?
சுட்டெரிக்கும் சூரியனின் ஒளி வாங்கி
குளிர்வித்து தருவதற்கு நீ நிலாவா?
இல்லை குளிர் சாதனமா?
சந்திரன் என்பார் உன்னை
மதிமுகம் என்பார் பெண்ணை
எனக்குள்ளே ஒரு கேள்வி
நிலா நீ ஆணா இல்லை பெண்ணா?
No comments:
Post a Comment