வீரென கத்திய கடிகார அறிவிப்பால்
சட்டென எழும்பி பட்டென குளித்து
அம்மா தந்த உணவினை புசித்து
கொட்டகையிலிருந்த காரினை
அவசரமாய் இயக்கிக்கொண்டு
அலுவலகம் ஏகிறேன்.....
என் முகம் கண்ட ஊழியரெல்லாம்
கைகட்டி வணக்கம் சொல்லி வரவேற்று
ஜில்லென்று குளிரூட்டிய என் அறையில்
முகாமையாளர் பெயர் பலகை பின்னே
சுற்றிவரும் சுழல் நாற்காலியில்
அமர்ந்து கொண்டு அழுத்துகிறேன் மணியை ...
தேவையை நிறைவேற்ற தீயாய் ஒருவன்
கையெழுத்துக்காய் காத்திருக்கிறது கோப்புக்கள்
நித்தம் கையெழுத்திடும் சலிப்போடு
பேனா கிறுக்குகிறது கடதாசிகள் மேல்
பேனாக்கு ஓய்வளித்து இடைவேளை
எடுக்கிறது களைப்படைந்த மூளை ...
திடீர் என ஒரு குரல் யார் இங்கே
என்னை பெயர் சொல்லி அழைப்பது?
திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன்
கையில் கோப்புடன் வேலைதேடி நான்
யாவும் கற்பனை என்பதை உணர்ந்து
நேர்முகத்தேர்வு அறையை நோக்கி நான் ....
No comments:
Post a Comment